புஜாரா, மயங்க் அரைசதம் | நவம்பர் 15, 2019
இந்துார்: வங்கதேச அணிக்கு எதிரான இந்துார் டெஸ்டில் இந்திய வீரர்கள் புஜாரா, மயங்க் அகர்வால் அரைசதம் எட்டினர்.
இந்தியா வந்துள்ள வங்கதேச அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் இந்துாரில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் வங்கதேச அணி 150 ரன்கள் எடுத்தது. முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 1 விக்கெட்டுக்கு 86 ரன்கள் எடுத்திருந்தது. மயங்க் அகர்வால் (37), புஜாரா (43) அவுட்டாகாமல் இருந்தனர்.
இன்று இரண்டாவது நாள் ஆட்டம் நடக்கிறது. அபு ஜயேத் ஓவரில் அடுத்தடுத்து பவுண்டரிகள் அடித்த புஜாரா, டெஸ்ட் அரங்கில் 23வது அரைசதம் எட்டினார். தொடர்ந்து வேகமாக ரன்கள் சேர்க்க முயன்ற புஜாரா, 54 ரன்னுக்கு அவுட்டானார்.
மயங்க் அகர்வாலுடன், கேப்டன் கோஹ்லி இணைந்தார். எபாதத் ஓவரில் இரண்டு பவுண்டரி விளாசிய மயங்க், தன் பங்கிற்கு அரைசதம் எட்டினார். மறுமுனையில் கோஹ்லி, 2வது பந்தில் ‘டக்’ அவுட்டாகி, ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். இந்திய அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 129 ரன்கள் எடுத்திருந்தது.